"காதலிக்கு திருமணம் நிச்சயம்; கழுத்தை அறுத்த காதலன்;" கும்பகோணத்தில் நடந்த கொடூர கொலை!
"காதலிக்கு திருமணம் நிச்சயம்; கழுத்தை அறுத்த காதலன்;" கும்பகோணத்தில் நடந்த கொடூர கொலை!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் இவரது மகள் வசந்தப்ரியா (25) கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். ஆசிரியை வசந்த பிரியாவிற்கும் வலங்கைமானை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற வசந்தப்ரியா மாலை நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் வசந்தபிரியாவை தேடிச் சென்றனர். இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பெண் ஒருவர் நேற்று மாலை மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனை கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்த வசந்த பிரியாவின் பெற்றோர் கொலை செய்து கிடப்பது தங்களது மகள் வசந்த பிரியா தான் என உறுதி செய்தனர். மகளின் உடலை கண்டு கதறி அழுதனர்.
இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரணையை துவங்கினர் காவல்துறையினர்.
சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ஆசிரியை வசந்த பிரியா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மோட்டார் சைக்கிளில் வசந்த பிரியாவை அழைத்து செல்லும் வாலிபர் யார் என்ற கோணத்தில் விசாரணை துவங்கியது. மேலும் வசந்த பிரியாவின் உறவினர்களிடம் இதைப்பற்றி விசாரிக்கையில் அவர் வசந்த பிரியாவின் திட்டக்குடியை சேர்ந்த மாமன் மகன் நந்தகுமார்(25), என்பது தெரியவந்தது.
வசந்த பிரியாவை விட ஆறு மாதங்கள் இளையவரான நந்தகுமார் வசந்த ப்ரியாவை காதலித்து வந்துள்ளார். வசந்த பிரியாவும் இவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து நந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி நந்தகுமார் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் அதில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
நானும், வசந்தபிரியாவும் காதலித்து வந்தோம். இந்நிலையில் வசந்தபிரியாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பத்தை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியா வேலை செய்த பள்ளிக்கு சென்றேன். பள்ளி முடிந்து வெளியே வந்த வசந்தபிரியாவிடம் பேசவேண்டும் என்று கூறினேன். அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டேன்.
கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றங்கரையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வசந்தபிரியாவை அழைத்து சென்றேன். அங்கு வைத்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வசந்தபிரியாவிடம் வலியுறுத்தினேன். அப்போதும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தபிரியாவின் கழுத்தை அறுத்தேன். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் நான் அங்கிருந்து தப்பித்து திட்டக்குடிக்கு சென்றேன். திட்டக்குடியில் எனது உறவினர்கள் வசந்தபிரியாவை யாரோ கொலை செய்து விட்டனர் என கூறினர். நானும் ஒன்றும் தெரியாததுபோல் அவர்களுடன் கும்பகோணத்துக்கு புறப்பட்டேன்.
போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்த நான், எனது உறவினர்களுடன் காரில் கும்பகோணத்துக்கு வரும் வழியில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினேன். இதற்கிடையில் எங்களது கார், திருப்பனந்தாள் வந்தபோது அங்கு தயாராக இருந்த காவல்துறையினர் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.