அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அன்பில் மகேஷ் பெருமிதம்..!

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அன்பில் மகேஷ் பெருமிதம்..!



govt-schools-are-not-a-sign-of-poverty-sign-of-pride

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில், மாணவர்களுக்கான ‘புதியன விரும்பு’ என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்பு உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் மேலும் கூறியதாவது-:

கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையிலும் மாணவ மாணவிகளின் தனித் திறமையினை வெளிக் கொண்டுவரும் வகையிலும் புதியன விரும்பு என்ற தலைப்பில் தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பிள்ளைகள் பாடங்களை மட்டும் கற்பதை காட்டிலும் மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் மற்றும் தன்னுள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் தெரியாதவற்றை கற்றுக் கொள்ளவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, மலை மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லை. இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

பழங்குடியினர் கல்வி கற்க தேவையான விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.