தப்பித்தவறி கூட தொட்டுவிட வேண்டாம்; பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: அமைச்சர் சேகர் பாபுவை எச்சரித்த அண்ணாமலை..!

தப்பித்தவறி கூட தொட்டுவிட வேண்டாம்; பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: அமைச்சர் சேகர் பாபுவை எச்சரித்த அண்ணாமலை..!



annamalai-warns-minister-sekar-babu-regarding-aatheenam

ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்திவிடுங்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி புத்தூர் கூட்ரோடு அருகே, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின், 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, அவர் எந்தத் துறையின் அமைச்சர் என்பதே தெரியாது எண்றும் அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் சூட்டிங்கின் போது லைட் பாயாக அவர் பணி செய்வதாக கூறினார்.

மேலும் அமைச்சர் சேகர் பாபுவும் பக்கம் திரும்பிய அவரது பேச்சு, சேகர் பாபு தற்போது புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்டத் துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். இவர்களது இஷ்டப்படி ஆடுவதை  மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

மரியாதைக்குரிய அமைச்சர் சேகர்பாபு அவர்களே, நீங்கள் ஆதீனத்தின் மேல் கையை வைத்து பாருங்கள். பின் விளைவுகள் கடுமையாக இருப்பதை உணர்வீர்கள். ஆதீனங்களை மிரட்டும் வேலையை இத்தோடு நிறுத்தி விடுங்கள். ஆதீனங்களை நேரில் வரவைத்து முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இது இவர்களின் அழிவுக்கு தொடக்கமாக இருக்கும்.

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த இடத்தை குத்தகைக்கு விட்டவர்களே தி.மு.க-வினர்தான். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், 10 தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு முதல், 2011ஆம் ஆண்டு வரை, தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க தொடங்கினால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதி பேர் சிறைக்கு செல்ல நேரிடும் என்று அண்ணாமலை கூறினார்.