விமானத்தில் அடிபட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி மறுத்து கீழே இறக்கிவிடுவோம் என மிரட்டிய ஸ்பைஸ்ஜெட் விமானி; கதறும் பெண் பயணி!

விமானத்தில் அடிபட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி மறுத்து கீழே இறக்கிவிடுவோம் என மிரட்டிய ஸ்பைஸ்ஜெட் விமானி; கதறும் பெண் பயணி!



spice jet refused medical for women

நேற்று இரவு டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஸ்ரதா திரிபாதி என்ற 33 வயது பெண் பயணி பயணம் செய்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்பே அவரது தலையில் மேலிருந்து விழுந்த பாட்டிலால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ உதவி கேட்டு அலறிய பெண்ணை கீழே இறக்கி விடுவோம் என விமான ஊழியர்கள் மிரட்டியதாக அந்த பெண் பயணி புகார் அளித்துள்ளார்.

இதைப்பற்றி அந்தப் பெண் பயணி கூறுகையில் "எனது தலையில் பாட்டில் விழுந்தவுடன் எனக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் வேண்டுமென விமானத்திலிருந்த பணியாளரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ எனக்கு உதவி செய்யாமல் நான் சத்தம் போடுவதாக விமான ஓட்டுனரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விமானி நான் அமைதியாக இல்லாவிட்டால் என்னை கீழே இறக்கி விடுவதாக மிரட்டினார்." என்று கூறினார்.

பின்னர் விமானத்தில் இருந்து  இறக்கப்பட்ட அந்த பெண் பயணி மாலை எட்டு முப்பது மணி அளவில் மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்தபின் 9 40 மணியளவில் புறப்பட்ட அடுத்த விமானத்தில் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள தகவலில் "விமானத்தில் மேல் பகுதியில் தவறாக வைக்கப்பட்டிருந்த ஒரு பையை எடுக்கும் பொழுது அதில் இருந்த ஒரு பாட்டில் தவறி அந்த பெண் பயணியின் மீது விழுந்து விட்டது. இதில் அந்த பெண்ணின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டது. அதற்காக விமானத்தின் பணியாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த பெண் பயணி மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக அந்த ஊழியரை திட்டியுள்ளார்.

விமானத்தில் பணியில் இருந்த மூத்த பணியாளர்களும் அந்த பெண்ணிடம் சென்று மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் தவறுதலாக நடந்து கொண்டுள்ளார். இதற்காகவே அவர் கீழே இறக்கி விடப்படுவார் என எச்சரிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அடுத்ததாக மும்பைக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இது எந்தவித உள்நோக்கத்துடனும் நடத்தப் பட்டது கிடையாது. பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதே எங்களது கடமை" என்று அறிவித்துள்ளது.