டேட்டிங் ஆப் காதலனை நம்பி ரூ.10 இலட்சம் இழந்த பெண்.. மக்களே உஷார்.. திருட்டு கும்பல் புது டெக்னீக்..!



Kerala Woman Cheated by Nigerian Man Trap of Marriage

இளைஞர்களை குறிவைத்து போலி கணக்கில் கும்பல் ஏமாற்றி வந்த நிலையில், தற்போது பெண்களை குறிவைத்து மோசடியில் இறங்கியுள்ள பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது. நைஜீரியா - வெளிநாடு - டெல்லி சுங்கக்கட்டணம் - ரூ.10 இலட்சம் என பெறப்படும் அழைப்புகளில் உஷாராக இருக்க வேண்டும் என்பதை பல செய்திகள் உணர்த்திய நிலையில், மீண்டும் அதனை உறுதி செய்ய மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் வசித்து வரும் இளம்பெண், சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு டேட்டிங் செயலி தொடர்பான அறிமுகம் ஏற்படவே, அதனை பதிவிறக்கம் செய்து தனது தகவலை தெரிவித்துள்ளார். அப்போது, நைஜீரிய நாட்டினை சேர்ந்த எனுகா அரின்சி எபேனா (வயது 36) என்பவர் பெண்ணுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். 

இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார். இருவரும் தங்களின் குடும்ப விபரங்களை பரிமாறிக்கொண்ட நிலையில், நைஜீரிய இளைஞர் விமானியாக இருப்பதாகவும், கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில வாரத்திற்கு முன்னதாக எனுகா பெண்ணுக்கு தொடர்பு கொண்டு, நான் டெல்லி வந்துள்ளேன். கையில் ரூ.1 கோடியே 50 இலட்சம் பணம் எடுத்து வந்திருப்பதால், சுங்க அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளார்கள். இதனை வரி செலுத்தி கொண்டு வர ரூ.10 இலட்சம் வேண்டும் என கேட்டுள்ளார். 

KERALA

அப்பாவி பெண்ணும் நைஜீரிய இளைஞர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.10 இலட்சம் பணம் அனுப்பிய நிலையில், மீண்டும் கூடுதலாக ரூ.11 இலட்சம் கேட்டுள்ளார். இதனால் மீண்டும் வங்கிக்கு பெண்மணி சென்று ரூ.11 இலட்சம் அனுப்ப முயற்சித்துள்ளார். வங்கியில் இருந்த காசாளர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெண் போலி வாக்குறுதியை நம்பி ரூ.10 இலட்சம் அனுப்பியதும், ரூ.11 இலட்சம் மேற்படி அனுப்ப முயன்றதும் உறுதியானது. கேரள காவல் துறையினர் டெல்லி காவலர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது பெண்ணுக்கு மோசடி செயலில் சிக்கியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவரிடம் புகார் பெற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நொய்டாவில் தங்கியிருந்த எனுகாவை கைது செய்து கேரளா அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் குடும்பத்துடன் இந்தியாவில் தங்கியுள்ள நிலையில், பல்வேறு பெண்களிடம் மோசடி செய்ததும் உறுதியானது. எனுகா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.