150 சவரன், ரூ.50 இலட்சம், பிஎம்டபிள்யு கார் கேட்டு காதலன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை; பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை.!

150 சவரன், ரூ.50 இலட்சம், பிஎம்டபிள்யு கார் கேட்டு காதலன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை; பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை.!



Kerala Thiruvananthapuram Women Doctor Suicide Dowry Issue 

 

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் சஹானா (வயது 26). இவர் அதே மருத்துவக்கல்லூரியில் பிஜி பயின்று வந்த இஏ ரூவிஸ் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னாளில் இவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் தொடர்பாக முடிவெடுத்து இருக்கின்றனர். தங்களின் காதலை பெற்றோரிடமும் தெரிவித்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தபோதிலும், மணமகனின் வீட்டில் 150 சவரன் நகைகள், 50 இலட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யு கார் வேண்டும் என வரதட்சணை முன்வைக்கப்பட்டுள்ளது. 

பெண்ணின் குடும்பத்தினர் சார்பிலும் 50 சவரன் நகைகள், ரூ.50 இலட்சம் ரொக்கம், ஆடம்பர கார் ஒன்று வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சம்மதிப்பது போல நடித்த மணமகன் குடும்பத்தினர், தாங்கள் கேட்ட வரதட்சணை விஷயங்களில் கெடுபிடியாக இருந்துள்ளனர். 

இதனால் மருத்துவர் சஹானா மனஉளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில், சம்பவத்தன்று பணியில் இருந்தபோது தனது அறைக்கு சென்று உட்புறமாக தாழிட்டு மயக்க மருந்து அதிகளவு செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். அவரை செவிலியர்கள் தேடியபோது மருத்துவரின் அறை பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து, அவர்கள் காவல் துறையினர் உதவியுடன் கதவை உடைத்து மருத்துவரை மீட்டு, பிற மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தும் பலனில்லை. அதற்குள் பெண் மருத்துவரின் உயிர் பறிபோயுள்ளது. அவர் தற்கொலைக்கு முன்னதாக "அனைவர்க்கும் பணம் வேண்டும். அதுதான் முக்கியம்" என எழுதி வைத்துள்ளார். 

மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.