50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… ஒரேயொரு பேஸ்புக் பதிவால் சிக்கினார்..!

50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… ஒரேயொரு பேஸ்புக் பதிவால் சிக்கினார்..!



former-school-teacher-arrested-under-pocso-act

50 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஒரு பேஸ்புக் பதிவு ஏற்படுத்திய அதிர்வலையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். பள்ளி ஆசிரியரான இவர், மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். சசிகுமார் கடந்த 38 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றவர். மார்ச் 31 ஆம் தேதி பள்ளியின் சார்பில் அவருக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்ச்சி குறித்து அவர் முகநூலில் பதிவிட்டார். அந்த பதிவில் அவரது நண்பர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மஞ்சேரியைச் சேர்ந்த சசிகுமாரின் முன்னாள் மாணவர் குமார் என்பவர், கே.வி.சசிகுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னிடம் பயின்ற மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முகநூலில் பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பினார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது கல்வித்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது மலப்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சசிகுமார் மீதான புகார் குறித்து  உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தன்னிடம் படித்த மாணவிகள் பலரும் புகார் தெரிவித்ததும், அதன் மீது காவல்துறையினர் தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததையும் அறிந்த சசிகுமார் தலைமறைவானார்.

காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, நேற்றிரவு கே.வி.சிவகுமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து காவல்துறையினர் சிவக்குமாரிடம் தொடர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ளதால், தனது கவுன்சிலர் பதவியை சசிக்குமார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.