தாயை தாக்கிய மகன்.. வைரலான வீடியோவால், விரைந்த அதிகாரிகள்.. தாயின் நெகிழ்ச்சி செயல்..!



Andra Pradesh Gundur Mother Attacks by Son Video Goes Viral Official Warn Son

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர், தாடேபள்ளி பிரம்மானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி (வயது 61). இவரின் கணவர் வெங்கடேஸ்வரா ராவ். தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். நாகமணிக்கு அரசு வழங்கிய நிலத்தில் வீடுகட்டி வசித்து வரும் குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், கடந்த 3 வருடத்திற்கு பின்னர் வெங்கடேஸ்வரா ராவ் உயிரிழந்த பின்னர் நாகமணி தனியே வசித்து வந்துள்ளார். 

மேலும், அவரின் மகன் சேஷு மனைவியுடன் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நாகமணி வசித்து வரும் வீட்டினை விற்பனை செய்து பணம் தரக்கூறி சேஷு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தாயாரின் வீட்டிற்கு வந்த மகன் சேஷு, வீட்டை விற்பனை செய்து தரக்கூறி மீண்டும் பிரச்சனை செய்துள்ளார். அப்போதும், நாகமணி மறுப்பு தெரிவித்துள்ளார். 

Andra Pradesh

இதனால் ஆத்திரமடைந்த சேஷு தன்னை பெற்றெடுத்த தாய் என்றும் பாராது, நாகமணியை கீழே தள்ளி தாக்கினார். மேலும், கால்களால் தாயின் வயிற்றை எட்டி உதைத்து, வீட்டில் உள்ள பாத்திரத்தை கீழே தள்ளி தகராறு செய்தார். இதனை வீடியோ எடுத்த அக்கம் பக்கத்தினர், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காவலர்களின் கவனத்திற்கு செல்ல, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, மாநில மகளிர் ஆணைய தலைவர் உட்பட அதிகாரிகள் நாகமணியின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை செய்த நிலையில், மகனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யலாமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு தாயோ, எனது மகனை கைது செய்ய வேண்டாம் என கண்ணீர் வடித்து, மகனிடம் அறிவுரை கூறுமாறு கோரிக்கை வைத்தார். இதனைக்கேட்டு மனம் நெகிழ்ந்துபோன அதிகாரிகள், சேஷுவை அழைத்து உச்சகட்ட எச்சரிக்கை விடுத்து சென்றனர்.