அரசியலை விட்டு விலகியது ஏன்? மீண்டும் வருவீர்களா? நடிகர் நெப்போலியன் அதிரடி பதில்!
அரசியலை விட்டு விலகியது ஏன்? மீண்டும் வருவீர்களா? நடிகர் நெப்போலியன் அதிரடி பதில்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும், பின்னர் அரசியலில் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். அதனைத் தொடர்ந்து மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் தற்போது தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். மேலும் அரசியலை விட்டு விலகிய அவர் அவ்வபோது தமிழ் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் தற்போது டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக ஜும் செயலி மூலம் நெப்போலியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் கூறியதாவது, மத்திய அமைச்சராக இருந்தபோது நடிக்கக் கூடாது என்ற விதி இருந்தது. அதனால் அப்போது நடிக்கவில்லை. பின்னர் நாளடைவில் கொஞ்சம் நடிக்க துவங்கினேன்.
பின்னர் எனது மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா வந்த பிறகு, எனது பிள்ளைகள் என்னை நடிக்கக்கூடாது, அரசியலுக்கும் போகக்கூடாது என சொல்லிவிட்டார்கள். மேலும் அரசியலுக்கு சென்றால் நீங்கள் அங்கேயே தங்கிவிடுவீர்கள், நாங்கள் தனியாக இருப்போம் என கூறினர் அதனால் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டேன். பின்னர் தற்போது நடிப்பதற்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும் அரசியலை விட்டு ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் ஆசை என்பது தற்போது எனக்கு சுத்தமாக கிடையாது. எனது 50 வயதிற்குள் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் என அனைத்தையும் சாதித்து விட்டேன். எனவே இனிமேல் வரும் சந்ததியினர் அதனைப் பார்த்துக் கொள்ளட்டும். அரசியல் பக்கம் வரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறேன் என நெப்போலியன் கூறியுள்ளார்