எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்.? இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு "தமிழ்ப் படம்" இயக்குநர் கேள்வி!

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்.? இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு "தமிழ்ப் படம்" இயக்குநர் கேள்வி!



cs amuthan question to former england captain

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அவரது பதிவில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியானது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். ரிஹானாவின் டுவிட்டுக்கு பிறகு, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

sachin

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவிற்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இதே கருத்தை கிண்டலடிக்கும் வகையில், "தமிழ்ப் படம்" இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு பதிவிட்டுள்ளார். அதாவது இன்று சென்னையில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், குல்தீப்பை இந்திய அணியில் சேர்க்காதது அபத்தமான முடிவு. அவரை எப்போது அணியில் சேர்க்கப் போகிறீர்கள்? என்று பதிவிட்டிருந்தார்.

இதனை டேக் செய்த 'தமிழ்ப் படம்' இயக்குனர் சி.எஸ்.அமுதன், எங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்? எங்கள் தேசத்தின் இறையாண்மையை ஒருபோதும் சமரசம் செய்ய விடமாட்டோம் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.