இந்திய சுற்றுலா பயணத்தில் பன்றி நாடாப்புழு தொற்று! மூளையில் இருந்த 38 ஒட்டுண்ணிகள்... . 11 ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்த பிரிட்டன் பெண்..!!!
இந்திய பயணத்துக்குப் பிறகு பன்றி நாடாப்புழு தொற்றால் மூளையில் ஒட்டுண்ணிகள் உருவாகி 12 ஆண்டுகள் சிகிச்சை பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணின் அனுபவம் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான லோரி டென்மனின் இந்தியப் பயணம், எதிர்பாராத மருத்துவச் சவாலாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மூளையில் ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சுமார் 12 ஆண்டுகள் நீண்ட சிகிச்சைக்குப் பிறகே அவர் முழுமையாக குணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண அறிகுறியாக தொடங்கிய பாதிப்பு
2007-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மூன்று மாத சுற்றுப்பயணமாக வந்திருந்த லோரி டென்மன், ஒரு கட்டத்தில் தனது உடலில் இருந்து நீளமான நாடாப்புழு வெளியேறியதை கவனித்தார். ஆரம்பத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்று கருதப்பட்டாலும், பின்னர் அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. 2011-ஆம் ஆண்டு அவருக்கு முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையும் படிங்க: 3 வருஷமா கடும் அவதி... நாளுக்கு நாள் அதிகரித்த வலி! கடைசியில் எக்ஸ்-ரேயில் தெரிந்த மர்மம்.... மருத்துவர்களையே ஆடிப்போன அந்த ஒரு தருணம்.!!!
மூளையில் 38 ஒட்டுண்ணிகள்
மருத்துவப் பரிசோதனையில், அவரது மூளையில் லார்வா நிலையில் 38 ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பால் கடுமையான தலைவலி, வலிப்பு, நினைவாற்றல் குறைபாடு மற்றும் மனநலச் சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மருந்துகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், நீண்ட காலம் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக 2022-ஆம் ஆண்டு அவர் முழுமையாக குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை
நாடாப்புழு தொற்றால் ஏற்படும் நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் என்பது, பன்றி நாடாப்புழுவின் லார்வாக்கள் மூளையை தாக்குவதால் உருவாகும் தீவிர பாதிப்பாகும். முறையாக சமைக்கப்படாத பன்றி இறைச்சி அல்லது சுகாதாரமற்ற உணவு, நீர் ஆகியவற்றின் மூலம் இந்த தொற்று பரவக்கூடும். வயிற்று வலி, மலத்தில் புழுக்கள் வெளியேறுதல், வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.