17 வயதில்... நள்ளிரவில் அனுப்பிய ஒரு மெசேஜ்! அதிகாலையில் வந்த அற்புத வாய்ப்பு....! இப்போ 22 வயதில் 1 கோடிக்கு மேல் வருமானம்! சாதனை கதையின் சமார்த்தியம் என்னன்னு பாருங்க...!!!
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான 17 வயது மாணவன் ஆதித்யா பன்சால், ராஜ் ஷமானிக்கு அனுப்பிய X பதிவு மூலம் வாய்ப்பு பெற்று 22 வயதில் கோடீஸ்வரரானார்.
ஜே.இ.இ. தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 17 வயது மாணவனின் வாழ்க்கை, நள்ளிரவில் அனுப்பிய ஒரு X பதிவு மூலம் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்தது. ராஜ் ஷமானிக்கு அனுப்பிய அந்தப் பதிவு அவருக்கு முதல் பெரிய தொழில் வாய்ப்பை பெற்றுத் தந்தது. இன்று 22 வயதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ள ஆதித்யா பன்சாலின் பயணம் பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜே.இ.இ. பாதையை விட தொழில்முனைவில் ஆர்வம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களைப் போலவே ஆதித்யாவுக்கும் ஜே.இ.இ., பொறியியல் படிப்பு, நல்ல வேலை என வழக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அவரது கவனம் ஆரம்பத்திலிருந்தே தொழில்முனைவு, சுய முன்னேற்றம், ஆன்லைன் வணிகம் ஆகியவற்றில்தான் இருந்தது.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் கிராஃபிக் டிசைனிங், வெப் டெவலப்மென்ட் உள்ளிட்ட பல துறைகளில் முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. “நீண்ட காலமாகப் பணம் சம்பாதிக்க முயன்றேன். பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன” என்று தனது ஆரம்பகால அனுபவங்களை அவர் நினைவுகூர்கிறார்.
நள்ளிரவில் அனுப்பிய பதிவு... அதிகாலையில் வந்த வாய்ப்பு
ஒருநாள் இரவு தொழில்முனைவோரும் பாட்காஸ்டருமான ராஜ் ஷமானியின் வீடியோவை ஆதித்யா பார்த்தார். அதில் இடம்பெற்ற கருத்துகளைத் தொகுத்து ஒரு X த்ரெட் எழுத முடிவு செய்தார். கூகுள் டாக்ஸில் பல மணி நேரம் செலவிட்டு அதை தயாரித்த அவர், இரவு 10.41 மணிக்கு ஷமானிக்கு நேரடியாக அனுப்பினார்.
அதிகாலை 3.53 மணிக்கே பதில் வந்தது. அந்தப் பதிவை தனது கணக்கில் வெளியிட்டு, நல்ல வரவேற்பு கிடைத்தால் தனது X பதிவுகளுக்காக ஆதித்யாவை வேலைக்கு அமர்த்துவதாக ஷமானி கூறினார். பதிவு வெளியானதும் சுமார் 1,200 லைக்குகளை பெற்றது. இதையடுத்து 17 வயது ஆதித்யாவின் திறமையை அவர் கவனித்தார்.
அப்போது தனக்கு பட்டப்படிப்போ, வேலை அனுபவமோ, பெரிய சாதனைகளோ எதுவும் இல்லை என்று ஆதித்யா கூறுகிறார். இருந்தபோதும் தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியதாக ராஜ் ஷமானியை அவர் நினைவுகூர்கிறார். வங்கிக் கணக்கு இல்லாததால், முதல் சம்பளம் அமேசான் கிஃப்ட் கார்டுகளாகவே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
22 வயதுக்குள் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம்
ஷமானி தனக்கு தேவையான தகவல்களை வழங்கியதுடன், பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தது போன்ற சிறிய விஷயங்களிலும் அக்கறை காட்டியதாக ஆதித்யா கூறுகிறார். பின்னர் ஷமானிக்கு முழுநேரக் குழு தேவைப்பட்டதால் அந்தப் பணிச்சேர்க்கை முடிந்தது. ஆனால் அவரிடமிருந்து கிடைத்த நற்சான்றிதழ் ஆதித்யாவுக்கு புதிய வாடிக்கையாளர்களை பெற உதவியது.
அதன்பின் வேகமாக முன்னேறிய ஆதித்யா, இதுவரை 45-க்கும் மேற்பட்ட நிறுவனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தொழில்முனைவு பயணம் மூலம் தனது 22 வயதுக்குள் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நன்றி ராஜ் ஷமானி. நான் அனுப்பிய அந்த X செய்திதான் நான் செய்தவற்றில் மிகச் சிறந்த ஒன்று” என்று ஆதித்யா நன்றியுடன் கூறியுள்ளார். ஒரு சிறிய முயற்சி சரியான நபரின் கவனத்தை ஈர்த்தால் எத்தகைய வாய்ப்புகள் உருவாகும் என்பதற்கு அவரது வெற்றிப் பயணம் தற்போது இளைஞர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.