போதும் வாழ்க்கையில் ஓடுனது... 29 வயதிலே கார்ப்பரேட் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற இளம்பெண்! அதிரவைக்கும் காரணம்... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!!
29 வயதிலேயே கார்ப்பரேட் வேலையை விட்டு ஓய்வு பெற்ற புனேவைச் சேர்ந்த ஸ்னேஹா ராஜ்குரு, இயற்கை சூழலில் விவசாய வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார்.
புனேவைச் சேர்ந்த 29 வயது ஸ்னேஹா ராஜ்குரு, கார்ப்பரேட் வேலையை விட்டு ஓய்வு பெற்றுள்ளார். கணினி திரை, பணிச்சுமை என நகர வாழ்க்கையைத் துறந்து, தற்போது விவசாய வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது வாழ்க்கை முறை குறித்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
கார்ப்பரேட் வேலையை விட்டு விவசாயம்
நீண்ட நேர பணி மற்றும் போட்டி நிறைந்த கார்ப்பரேட் சூழலில் இருந்து விலகிய ஸ்னேஹா, நகர்ப்புற வசதிகளுக்குப் பதிலாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார். தனது ‘BaapBeti Farm’ பண்ணை வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நேபாள பனிப்பாறை ஏரி உடைப்பு... இமயமலையில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
சுயசார்பு வாழ்க்கைக்கு 4 வழிகள்
சிறிய நிலத்தை வாங்கி அதற்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவது முதல் படி என்கிறார் ஸ்னேஹா. குறைந்த பராமரிப்பில் நீண்ட காலம் பலன் தரும் பழ மரங்களை வளர்க்க வேண்டும் என்றும், தேவையான உணவை முடிந்தவரை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். நிலத்தைச் சுற்றிலும் பூக்களை வளர்ப்பது மன அமைதிக்கும் இயற்கையின் அழகை ரசிக்கவும் உதவும் என்கிறார்.
“மன அமைதியே உண்மையான ஓய்வு”
“ஓய்வு என்பது வயதைப் பொறுத்தது அல்ல; வாழ்க்கையின் கடுமையான அழுத்தத்தை விட மன அமைதியைத் தேர்வு செய்வதே உண்மையான ஓய்வு” என்பது ஸ்னேஹாவின் கருத்து. பணம், பதவி ஆகியவற்றை மட்டுமே வெற்றியின் அளவுகோலாக பார்க்காமல், ஆரோக்கியமான உணவு மற்றும் அமைதியான சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை முறை காட்டும் செய்தியாக உள்ளது. குறிப்பாக பணி அழுத்தத்தில் இருக்கும் பலரிடம் அவரது ஆரம்ப ஓய்வு முடிவு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.