போலீசாரின் அலட்சியத்தால் அரசுப்பள்ளி ஆசிரியர் அடித்தேகொலை? வீட்டில் அழுகி கிடந்த சடலம்.!
Viluppuram Crime News: வளத்தை அம்மாக்குளம் கிராமத்தில் வசித்து வந்த ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேல்மலையனூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அரசுப்பள்ளி ஆசிரியர்:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், வளத்தி, அம்மாக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் (வயது 50). இவர் மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய் ராஜம்மாளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் சென்னையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு ராஜம்மாள் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!
தொடர்புகொள்ள முடியவில்லை:
இதனிடையே, கடந்த 3 நாட்களாக இளங்கோவனுக்கு அவரின் தாய், பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் அக்கா ஆகியோர் செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கா மகன் கணபதி, நேற்று மாலை நேரத்தில் அவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது.
அழுகிய நிலையில் உடல்:
மேலும், வீட்டிலும் சந்தேகத்துக்கு இடமான துர்நாற்றம் வீசியது. பின்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில், அவ்வழியாக சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் ஷோபாவில் இளங்கோவனின் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணபதி மற்றும் பிற உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
குற்றசாட்டு:
இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் உடலில் காயங்கள் இருப்பதால், இளங்கோவன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இளங்கோவனை மர்ம கும்பல் ஒன்று நெகனூர் ஏரிக்கரையோரம் சரமாரியாக வெட்டியுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் அதுதொடர்பான முன்விரோதத்தில் இளங்கோவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என உறவினர்களின் குற்றசாட்டு முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ரத்தத்துக்கு ரத்தம்? 17 வயது சிறுவன் சரமாரியாக வெட்டிக்கொலை.. நடுரோட்டில் துள்ளத்துடிக்க பிரிந்த உயிர்.!