நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்காக இந்தியர்கள் உதவ வேண்டும்; சிரியா தூதரகம் கோரிக்கை...!
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்காக இந்தியர்கள் உதவ வேண்டும்; சிரியா தூதரகம் கோரிக்கை...!
இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம், நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு இந்தியர்கள் உதவ வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில இருந்து கொத்துக் கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா உட்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், மருந்து பொருட்களையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளன.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவி செய்ய வேண்டும் என, இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தெடர்பாக டெல்லியில் இருக்கும் சிரியா தூதரகம் வெளியிட்டுள்ள கோரிக்கையில், துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிட, மருத்துவ உபரகணங்கள், அவசர மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், குளிரை போக்க உதவிடும் துணிகள், போன்றவற்றை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி தர விரும்புபவர்களுக்காக, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code-ஐயும், சிரியா தூதரகம் வெளியிட்டுள்ளது.