சீனாவில் பிறப்பு விகிதம் குறைவு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும்...!

சீனாவில் பிறப்பு விகிதம் குறைவு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும்...!



China's low birth rate will give incentives to couples who have more children...

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன் 'ஒரு குழந்தை விதி' கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் அந்த நாட்டில் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வந்தது. இதையடுத்து கடந்த 2016-ஆம் வருடம் ஒரு குழந்தை விதி ரத்து செய்யப் பட்டது. கடந்த வருடம் மூன்று குழந்தைகள் பெற்று கொள்ள தம்பதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருந்த போதிலும் கடந்த ஐந்து வருடங்களாக பிறப்பு விகிதம் அந்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வருடம் சீனாவில் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 குழந்தைகளாக குறைந்துள்ளது.

அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம் சிறிய குடும்பங்கள் மீது உள்ள ஆர்வம் போன்றவை குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன. இதை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றுக்கு மேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சீன அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான செலவினங்களை அதிகரிக்கவும், நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு சேவைகளை செயல் படுத்தவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மானியங்கள், வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். 

பணக்கார சீன நகரங்கள், அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதற்காக, வரி, வீட்டு கடன், கல்வி சலுகைகள் வழங்குகின்றன. இது போன்ற அனைத்து மாகாணங்களிலும் சலுகைகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் சீனாவின் மக்கள் தொகை 2025-ஆம் ஆண்டுக்குள் குறைய தொடங்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.