18 வயது மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்: ஒருதலைக்காதல் தகராறில் விபரீதம்..!

18 வயது மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்: ஒருதலைக்காதல் தகராறில் விபரீதம்..!



youth-stabbed-18-year-old-student

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (20). வேலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த மாணவி (18). இவர் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர்.

இந்த நிலையில், இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்பு சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து திருவலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவலம் காவல்துறையினர், மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது சதீஷ்குமார் கூறுகையில், நானும் கல்லூரி மாணவியும் சில வருடங்களாக காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவர் வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசிவருகிறார். இதனால் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் குறித்து நான் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மாணவியை கத்தியால் குத்தினேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை திருவலம் பேருந்து நிறுத்தம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.