மனைவியிடம் பேசிய வாலிபரை அடித்தே கொன்ற கொத்தனார்: புளியங்குடியில் பரபரப்பு..!



young-man-who-speak-with-masons-wife-was-killed

புளியங்குடி அருகே மனைவியிடம் பேசிய வாலிபரை அடித்து கொலை செய்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ், அவருடைய மகன் கணேசன் (23) கொத்தனார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கணேசனின் மனைவியிடம் அடிக்கடி பேசி பேசி வந்துள்ளார். இதனை கவனித்த கணேசன் பாலகிருஷ்ணனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பாலகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே இது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன் பாலகிருஷ்ணனை கீழே தள்ளி அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். கொத்தனார் தனது மனைவியிடம் பேசிய வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.