காட்டுப் பகுதியில் கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்த மாணவி! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 16 வயது மகளை கடந்த 31-ஆம் தேதி முதல் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே வடக்கு நாகமங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில், நேற்று முன்தினம் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.இதனைப் பார்த்த அந்த பகுதியினர், மணிகண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காணாமல்போன சிறுமியின் உறவினர்கள் வந்து பார்த்து இறந்து கிடந்தது காணாமல்போன சிறுமி என்பதை உறுதி செய்தனர். அங்கு சிறுமியின் வாய் மற்றும் கால்கள் துணியால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மதிக்குமார் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், மதிக்குமார் தனக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் வேறு ஒருவருடன் மாணவி பழகி வந்ததால் சிறுமியை காட்டுப்பகுதிக்குச் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.