டிக்டாக் மூலம் ஐடி ஊழியரிடம் பணம் பறித்த இளம்பெண்! விசாரணையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!

டிக்டாக் மூலம் ஐடி ஊழியரிடம் பணம் பறித்த இளம்பெண்! விசாரணையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!


young-girl-cheating-it-employee

மதுரை எல்லீஸ் நகரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். 23 வயதான ராமச்சந்திரன் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் டிக் டாக் , பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அம்முகுட்டியிடம் டிக்டாக் மூலம் நெருக்கமான ராமச்சந்திரன், அப்பெண்ணின் முகநூல் பக்கத்திலும் இணைந்து, இருவரும் பேசி வந்துள்ளனர். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட அந்த பெண் குடும்பத்தில் பிரச்னை எனவும், மருத்துவமனை செலவுக்கு பணம் தேவை எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். அப்பெண்ணின் ஆசை வார்த்தைகளால் அந்த பெண்ணை முழுவதுமாக நம்பிய ராமச்சந்திரன் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 97,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளார். 

Tiktok

இந்தநிலையில், டிக்டாக் நண்பர்கள் சிலர் திருப்பூரில் ஒருங்கிணைத்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராமச்சந்திரன், தனது டிக்டாக் தோழியை வர சொல்லி இருக்கிறார். அவர் வராத நிலையில், சந்தேகமடைந்த ராமச்சந்திரன், அப்பெண்ணின் சமூக வலைதள கணக்குகளை  ஆராய்ந்து பார்த்தபோது அவை போலி என தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து  ராமசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் முகநூலில் பல இளைஞர்களிடம் பழகி, ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து, பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து டிக்டாக் மூலம் மோசடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்துள்ளனர்.