அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்?!: காஞ்சிபுரத்தில் சோபா சந்திரசேகர் அதிரடி பேட்டி..!

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்?!: காஞ்சிபுரத்தில் சோபா சந்திரசேகர் அதிரடி பேட்டி..!


Vijay Coming to Politics Sobha Chandrasekhar Action Interview in Kanchipuram

வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தயாரிப்பு பணிகள் முழுமையடைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். அம்மன் தரிசனம் செய்த பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷோபா சந்திரசேகர் கூறியதாவது:- நான் எப்போதும் கோயில்களுக்கு வருவது வழக்கம். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற அம்மன் அருள் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தேன். இன்று நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

வாரிசு படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக இருக்கும். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அது குறித்து விஜய் தக்க சமயத்தில் முடிவெடுப்பார். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இவ்வாறு ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.