சென்னையைப் போலவே மதுரை மக்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணமாக கொடுக்க வேண்டும்! டிடிவி தினகரன் கோரிக்கை!

சென்னையைப் போலவே மதுரை மக்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணமாக கொடுக்க வேண்டும்! டிடிவி தினகரன் கோரிக்கை!



Ttv dhinakaran request for madurai people

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்தநிலையில், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இதனால், தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.


இந்தநிலையில், சென்னையை தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக அங்குள்ள மக்களுக்கும் சென்னையைப்போல் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், சென்னையைப்போல கூட்டம் சேர்க்காமல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்காமல், அங்கங்கே கூட்டம் சேர்த்து,மக்களை வரிசையில் நிற்கவைத்து அளித்து வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. எனவே வீடுகளுக்கே சென்று நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.