மீண்டும் பரவுகிறது கொரோனா.. கடுமையான ஊரடங்கு உத்தரவுகள்?.. சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்.!



tn-health-ministry-advice-wear-facemask-to-avoid-corona

பெட்டியில் கிடந்த நாகப்பாம்பு தலையை தூக்கி தானே வெளிவந்தார் போல, கொரோனா மீண்டும் தனது பரவலை தொடங்கியுள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஊரடங்குக்கு தற்போதைய நிலையில் வாய்ப்பில்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவின் பரவல் தலைதூக்கி பார்க்க தொடங்கியுள்ளதால், மீண்டும் முகக்கவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மீண்டும் முகக்கவசம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி-யில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று கூடுதலாக 18 பேருக்கு உறுதியானது. இதனால் வளாகத்தில் உள்ள ஊழியர்கள், மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Corona virus

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்திக்கையில், "ஐ.ஐ.டி-யில் 1,420 பேருக்கு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடந்தது. இதில் 55 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கிறது. 

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விடுதியில் தொற்று பரவியுள்ளது உறுதியானது. 13 மாநிலத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முதல் 3 அலைக்கு இருந்த பதற்றம், இந்த அலைக்கு தேவையில்லை. புதிய வைரஸின் பரவலால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது. ஆனாலும், மக்கள் கவனமுடன் இருப்பது அவசியம்" என்று தெரிவித்தார்.