வீட்டிலேயே கள்ளச்சாராய கம்பெனி.. 100 பேருக்கு நேரடி & மறைமுக வேலை.. பெண் உட்பட 28 பேர் கைது.!

வீட்டிலேயே கள்ளச்சாராய கம்பெனி.. 100 பேருக்கு நேரடி & மறைமுக வேலை.. பெண் உட்பட 28 பேர் கைது.!



tirupattur-vaniyambadi-fake-liquor-supplier-and-28-othe

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த பெண், அவரின் கும்பல் என 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 8 குண்டர், 80 வழக்கு நிலுவையில் இருந்தும், ஜாமினில் வந்து பெண் செய்த தொடர் குற்றத்தின் முடிவில் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, இந்திரா நகர், நேதாஜி நகர் உட்பட பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய வியாபாரம் என்பது கொடிகட்டி பறந்து வருகிறது. வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு கள்ளச்சாராய விநியோகிஸ்தராக மகேஸ்வரி என்பவரின் தலைமையில் செயல்படும் கும்பல் தனது சட்டவிரோத செயலை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது. மேலும், கடந்த 25 வருடத்திற்கு மேலாக இவர்களின் அட்டூழியம் நடக்கிறது. 

இவர்களின் அட்டகாசத்தினை தாளாத பொதுமக்கள் கடந்த மாதம் 6 ஆம் தேதி முதலாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வேலூர் டி.ஐ.ஜி ஆனி விஜயா, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியன் மற்றும் வாணியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கள்ளச்சாராய கும்பலை பிடிக்க வீடு வீடாக சோதனை நடந்தது. 

இந்த சோதனையில் கள்ளச்சாராய கும்பலுக்கு உடந்தையாக இருந்த 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை திருவண்ணாமலையில் கள்ளச்சாராய கும்பல் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டினை சுற்றிவளைத்து தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

Tirupattur

அப்போது, கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரின் கணவர் சீனிவாசன், கூட்டாளிகள் தேவேந்திரன், உஷா, சின்னராஜ் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மகேஸ்வரி மீது 8 குண்டர் மற்றும் 80 வழக்குகள் உள்ள நிலையில், எதையும் கண்டுகொள்ளாது கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

மேலும், வீட்டில் வைத்தே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, சப்ளை செய்வது என இருந்து வந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட ஆட்களை வேலையாட்களாக நியமனம் செய்து கள்ளச்சாராய தொழில் கொடிகட்டி பறந்து வந்துள்ளது. மேலும், போலியான மதுபானத்தையும் தயார் செய்து உள்ளூரில் விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வழக்கில் மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.