ஹோட்டல் அதிபர் மர்ம மரணம்: மகனுக்கு திருமண நிச்சயம் செய்த நிலையில் பரிதாபம்!.. குழம்பும் போலீசார்...!



Tirunelveli hotel owner dies mysteriously

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு குரு சங்கர் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜநாராயணன் நெல்லையில் ஹோட்டல் நடத்திவந்ததால் குடும்பத்துடன் நெல்லையில் வசித்து வந்தார். இவரது மகளுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், சமீபத்தில் அவரது மகன் குரு சங்கருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தனது சொந்த ஊரான கூந்தன்குளத்திற்கு சென்ற ராஜநாராயணன், தனது காரில் நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தார். மூலக்கரைப்பட்டியில் கிளம்பி சிறிது தூரம் சென்ற கார் திடீரென பழுதடைந்து நின்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மகன் குரு சங்கரை தொடர்பு கொண்ட ராஜநாராயணன் அவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

தகவலறிந்த குரு சங்கர் மெக்கானிக் ஒருவருடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவரால் ராஜநாராயணனை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, புதன் கிழமை இரவு மூலக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் ராஜநாராயணன் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராஜநாராயணன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.