16 வயது சிறுமி காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை முயற்சி.. கயவன் தற்கொலை நாடகம்..!
16 வயது சிறுமி காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை முயற்சி.. கயவன் தற்கொலை நாடகம்..!
16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அவரது பெற்றோர் காதலுக்கு ஒப்புக்கொள்ளாததால் சிறுமியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சித்து, காதலன் தற்கொலை நாடகமாடிய சம்பவம் ஓட்டப்பிடாரம் அருகே நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் செவல்குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக இருந்து வருகிறார். இதே ஊரை சேர்ந்த தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் 16 வயது சிறுமி, வேல்முருகன் காதல் வலையில் வீழ்த்திய இருக்கிறார். மேலும், சிறுமியின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகள் பள்ளியில் படித்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டிய திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவே, மகளிடமும் காதலை கைவிடக்கூறி அறிவுறுத்தி இருக்கின்றனர். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட சிறுமியும் காதலை கைவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த டிச. 28 ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது கையில் வைத்திருந்த பூச்சிமருந்தை சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.
பின்னர், தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது போல நாடகமாடியுள்ளார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில், வீட்டின் வாசலுக்கு வந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாயார் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.