கொலையுண்ட தாய்!.. தலைமறைவான தந்தை!.. பரிதவிக்கும் 10 வயது சிறுமி..!

கொலையுண்ட தாய்!.. தலைமறைவான தந்தை!.. பரிதவிக்கும் 10 வயது சிறுமி..!



The scene where the little girl cries because her father is absconding while her mother is murdered

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியிலுள்ள வேலுநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (40). இவர் தனியார் நிறுவனத்தில் செக்கியூரிட்டி காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி (35). இந்த தம்பதியினரின் மகள் பலசத்யா (10). இவர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பலசத்யா கண் விழித்து பார்த்த போது, அவரது தாய் கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து தனது தந்தையை பலசத்யா தேடிய போது அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பாலசத்யா, கதறி அழுது கொண்டே அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதிகாலையில் அசம்பாவித செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடோடி வந்த உறவினர்கள் கார்த்திகை செல்வியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார்த்திகை செல்வியை இரும்பு ராடால் அடித்து கொன்ற ராஜசேகரன் தலைமறைவானது தெரிய வந்தது. இதனையடுத்து, தலைமறைவான ராஜசேகரை பிடிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல்கோடா தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் தற்போது ராஜசேகரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாய் கொலையுண்ட நிலையில் தந்தை தலைமறைவாகி உள்ளதால் சிறுமி பாலசத்யா கதறியழும் காட்சி அங்குள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.