பாதி எரிந்த இளைஞரின் சடலத்தை தண்ணீர் உற்றி அணைத்த போலீசார்: மனைவியின் புகார் மீது நடவடிக்கை..!

பாதி எரிந்த இளைஞரின் சடலத்தை தண்ணீர் உற்றி அணைத்த போலீசார்: மனைவியின் புகார் மீது நடவடிக்கை..!


The police extinguished the half-burnt body of the youth with water

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை அடுத்த செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராஜேஷ் (35). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆகி விட்டது.

இந்த நிலையில், ராஜேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தை சேர்ந்த சபீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே ராஜேசுக்கும், சபீதாவிற்கும் இடையே அடிக்கடி குழந்தை இல்லாததன் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ராஜேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அங்குள்ள இடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்துள்ளனர். இதற்கிடையே ராஜேஷின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை யாருக்கும் தெரிவிக்காமல் தகனம் செய்வதாகவும் அவரது மனைவி சபீதாவின் குடும்பத்தினர், திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து செவ்வேரி கிராம இடுகாட்டிற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு எரிந்து கொண்டிருந்த ராஜேஷின் உடல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.