என்னது எங்க வீட்டு மனை நடு ரோட்டுல இருக்கா?!..வீ.ஏ.ஓ கொடுத்த அதிர்ச்சியில் தாசில்தாரிடம் ஓடிய சகோதரர்கள்..!

என்னது எங்க வீட்டு மனை நடு ரோட்டுல இருக்கா?!..வீ.ஏ.ஓ கொடுத்த அதிர்ச்சியில் தாசில்தாரிடம் ஓடிய சகோதரர்கள்..!



The house is in the middle of the road and the brothers ran to the Tahsildar after being shocked by the VAO

கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வி. மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (43). இவரது சகோதரர் வெங்கடாசலம் (40) சகோதரர்கள் இருவரும் இணைந்து , அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியிலுள்ள காமநாயக்கன்பாளையம்-கரடி வாவி ரோட்டில் 13. 5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

தற்போது வீடு கட்ட முடிவெடுத்துள்ளதால் தங்களது மனையை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி என்பவரிடம் மனு அளித்துள்ளனர். இதன் பின்னர் அவர்களது வீட்டு மனையை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் கரடி வாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இது தான் உங்களுடைய வீட்டுமனை என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் இருவரும் தங்களது வீட்டு மனையை முறையாக மறு அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். தாசில்தார் விடுப்பில் இருந்ததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும் நடு ரோட்டில் வீட்டு மனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.