சொத்து தகராறில் விபரீதம்: முதல் மனைவியின் மகன்களும், மருமகளும் தாக்கியதில் டிரைவர் பலி..!

சொத்து தகராறில் விபரீதம்: முதல் மனைவியின் மகன்களும், மருமகளும் தாக்கியதில் டிரைவர் பலி..!



The driver was killed when his wife's sons and daughter-in-law attacked him in a property dispute

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகேயுள்ள ஆடையூர் கிராமம், குடியானூர் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (64. இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீரங்கம்மாள். இவர்களுக்கு சரவணன் (35), ராஜ்குமார் (31) என்ற மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்த சீரங்கன், 2 வதாக ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளைவு பகுதியில் புதிதாக வீடு கட்டி ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் முதல் மனைவியின் மகன்களுக்கு ஆடையூர் பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் இருவருக்கும் தலா 2 ஏக்கர் பிரித்து தருவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்துள்ளார்.

இது குறித்து சீரங்கன் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் சரவணன், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி ஆகியோர் சீரங்கன் வீட்டிற்கு சென்று வீட்டை மாற்றி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு சீரங்கனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சீரங்கனை ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் மீட்டு பெருந்துறையில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜலகண்டாபுரம் காவல்துறையினர், சீரங்கனின் மூத்த மகன் சரவணனை கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இளைய மகன் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனா தேவி  ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.