குப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை.! தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.!

குப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை.! தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.!


the-cleaning-staff-who-honestly-handed-the-jewelry-over

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த முனியம்மாள் என்பவரின் மகள் தேவிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு செல்ல வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். அப்போது தேவியின் திருமணத்துக்கு வாங்கிய 10 பவுன் நகையை எடுத்து பையில் வைக்கும்போது அந்த நகை தவறுதலாக குப்பை கொட்டும் பையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. 

இதனையடுத்து குப்பைகளோடு குப்பையாக அந்த 10 பவுன் நகை சாலையில் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டது. இது தெரியாமல் வீட்டில் இருந்த நகையை காணாமல் வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு எங்கும் கிடைக்காததால் கடைசியாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், சென்னை ராயபுரம், அடுத்துள்ள ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று காலை கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெரு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த குப்பையில் அழுக்கு இல்லாத பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் பளபளவென மின்னும் தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த நகையை எடுத்துக்கொண்டு காவலநிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். 

இதனையடுத்து இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த தேவி என்பவரது வீட்டில் இருந்த 10 பவுன் நகை மாயமானதாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு அந்த நகையை மணப்பெண் தேவியிடம் ஒப்படைத்துள்ளனர். நகையை பெற்றுக்கொண்ட அவர் மற்றும் அவரது உறவினர்கள் மாநகராட்சி தூய்மைப்பணியாளர் மோகனசுந்தரம் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். நகையை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மோகன சுந்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.