மனநலம் பாதிக்கப்பட்ட மகன் வெறிச்செயல்: தந்தையின் முகம் தெரியாத அளவு கல்லால் தாக்கி கொடூர கொலை.!

மனநலம் பாதிக்கப்பட்ட மகன் வெறிச்செயல்: தந்தையின் முகம் தெரியாத அளவு கல்லால் தாக்கி கொடூர கொலை.!



Tenkasi Surandai son Killed Father

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, சாம்பவர் வடகரை மேலூர் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பசாமி (வயது 74). மனைவி செண்டு. தம்பதியின் மகன் சக்திவேல் (வயது 45). இவருக்கு திருமணம் முடிந்து மகன், மகள் இருக்கின்றனர். 

அவ்வப்போது மனரீதியாக பாதிப்பை சந்தித்துவந்த சக்திவேல், அது தொடர்பாக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இது கணவன் - மனைவி சண்டையாகி, சக்திவேலின் மனைவி கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளை தன்னுடன் செங்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

வீட்டில் இருந்த சக்திவேல், தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்ததாக தெரியவருகிறது. சமீபத்தில் பெற்றோரையும் தாக்கி வீட்டில் இருந்து வெளியேற்றியிருக்கிறார். இதனால் கருப்பசாமி, தனது மனைவியுடன் அப்பகுதியில் இருக்கும் கருப்பசாமி கோவில் வளாகத்தில் கூரை அமைத்து தங்கி வந்துள்ளனர். 

மேலும், கருப்பசாமி காற்றாலை நிறுவனத்திலும் காவலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இன்று அதிகாலை கருப்பசாமி தங்கியிருந்த கோவில் வளாகத்திற்கு சென்ற சக்திவேல், தந்தை என்றும் பாராது, அவரை முகம் தெரியாத அளவு சரமாரியாக கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர், கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சக்திவேலை கைது செய்து மனநல சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.