சாதிவெறியர்கள் கூடாரமாக தென்மாவட்டம்.. ஆதிதிராவிடர்களுக்கு ஊர்க்கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பு : அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

சாதிவெறியர்கள் கூடாரமாக தென்மாவட்டம்.. ஆதிதிராவிடர்களுக்கு ஊர்க்கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பு : அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!



Tenkasi Sankarankoil SC Caste

ஆதிராவிடர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு கடைகளில் தின்பண்டங்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை உள்ளூர் கடைகளில் விற்பனை செய்ய கூடாது என தீர்மானம் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

சாதிகளின் பெயரால் மக்கள் இன்றளவும் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். இதில், சுயசாதி பற்றுள்ளவர்கள் பிற சமுதாயத்தினரை இழிவாக பேசுவது, அவதூறான செயல்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதையாகியுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள வடமாவட்டத்தில் சாதிய மோதல்கள் அதிகளவு நடப்பதாக பிம்பப்படுத்தப்பட்டாலும், மறைமுகமாக தென்மாவட்டங்களில் வடமாவட்டங்களை விட மோசமான சாதிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை அனைத்தும் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது. சில இடங்களில் பேசித்தீர்க்க வாய்ப்புள்ள பிரச்சனை கூட வன்முறையாக்கப்படுகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், பாஞ்சாகுளம் கிராமத்தில்  ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு ஊரில் உள்ள பிற சமுதாய கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது என தீர்மானம் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

கடைக்கு கையில் காசுடன் குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்க சென்ற நிலையில், அக்கடையில் இருப்பவர் உங்களுக்கும், உங்களின் தெரு மக்களுக்கும் எவ்வித பொருளும் கொடுக்க முடியாது. ஊர்கூடி தீர்மானம் போட்டுள்ளார்கள். உங்களின் பெற்றோரிடமும் இதனை சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.