மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரம்..! முடிவடைந்த மறுகூராய்வு.. என்ன நடந்தது.?

மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரம்..! முடிவடைந்த மறுகூராய்வு.. என்ன நடந்தது.?



student srimathi body re examination completed

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும்,  இறப்பிற்கு  பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், மாணவியின் உடல் மறுகூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முடிவடைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் சிறுமியின் உடலுக்கு மறுகூராய்வு முன்னெடுத்துள்ளனர்.

முன்னதாக மாணவியின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூராய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடல் கூராய்வு முழுவதையும் காணொளியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம், திருச்சி, சேலம் ஆகிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் மாணவி உடல் மறுகூராய்வு செய்யப்பட்டுள்ளது.