அறிவுரை கூறிய ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்.. மன்னிப்பு கேட்பது போல நடந்த பரபரப்பு சம்பவம்.!

அறிவுரை கூறிய ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்.. மன்னிப்பு கேட்பது போல நடந்த பரபரப்பு சம்பவம்.!


Sivaganga Karaikudi Govt ITI Teacher Murder Attempt by Student

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர், எந்திரவியல் துறையில் முதல் வருடம் பயின்று வருகிறார். இதே ஐ.டி.ஐ கல்லூரியில் காரைக்குடி பழனிச்சாமி நகரில் வசித்து வரும் ராஜா ஆனந்த் (வயது 48) என்பவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜா ஆனந்த் வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது, 18 வயது மாணவர் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக்கண்ட ஆசிரியர் மாணவரை கண்டித்தும் கேட்காது, அவர் தொடர்ந்து கேமில் நாட்டம் செலுத்தியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக ஆசிரியர் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கவே, முதல்வர் மாணவரை அழைத்து பெற்றோரை கூட்டி வர அறிவுறுத்தி இருக்கிறார். மாணவரும் தனது தாயாரை அழைத்து வந்த நிலையில், ஆசிரியர் வகுப்பறையில் மாணவனின் செயல்களை சுட்டிக்காண்பித்துள்ளார். 

Sivaganga

மேலும், மாற்றுச்சான்றிதழ் வாங்கி சென்று மகனை வேறெங்கேனும் படிக்க வையுங்கள் என ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். தாயும் மகனை கண்டித்து, படிப்பில் நாட்டம் செலுத்த அறிவுறுத்தி இருக்கிறார். ஆசிரியர்கள் இதுவே முதலும், இறுதியுமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். 

நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், வகுப்புக்கு வந்த மாணவன் ஆசிரியர் ராஜா ஆனந்தை நேரில் சந்தித்து, தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுவது போல நடித்து, ஆசிரியரை திடீரென சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 

இதனால் ஆசிரியர் இரத்தம் சொட்டச்சொட்ட அலறியபடி கீழே விழ, சத்தம் கேட்டு வந்த பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ராஜா ஆனந்தை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆசிரியர் அனுமதி செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சோமநாதபுரம் காவல் துறையினர், தப்பியோடிய மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.