"அடப்பாவமே..." ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்கள்... காப்பாற்ற சென்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த சோக முடிவு.!
தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமை புறம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா(38). இவர் ராணுவத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது திருச்சி பட்டாலியன் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற இளையராஜா தனது மனைவி மற்றும் அண்ணன் மகனுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்று இருக்கிறார். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அண்ணன் மகன்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கவே அவர்களைக் காப்பாற்ற சென்றுள்ளார் ஆரோன் இளையராஜா. இதனைத் தொடர்ந்து ஆற்றில் இருந்த ஆழமான பகுதியில் சிக்கியிருக்கிறார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்திலிருந்த மீனவர்கள் நீரில் குதித்து சிறுவர்களை காப்பாற்றி இருக்கின்றனர். ஆனால் ஆழமான பகுதியில் சிக்கிய ராணுவ வீரரை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய ராணுவ வீரரை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது இறுதிச் சடங்கு நாளை ராணுவ மரியாதை உடன் நடைபெறும் இடமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணன் மகன்களை காப்பாற்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.