
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று இன்று அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் நேற்று காலையில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது.
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அரசுத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்தார்.
இந்தநிலையில், புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக பள்ளிகளை பயன்படுத்த உள்ளதால் நவம்பர் 28 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement