சேலத்தை பதறவைத்த கொள்ளைக்கும்பலில் 2 பேர் கைது.. தவறி விழுந்து கால்களில் எலும்புமுறிவு.!
சேலத்தை பதறவைத்த கொள்ளைக்கும்பலில் 2 பேர் கைது.. தவறி விழுந்து கால்களில் எலும்புமுறிவு.!
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய 5 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரை கடத்திய கும்பல் ரூ.41 ஆயிரம் பணம், தங்க மோதிரம் போன்றவற்றை பறித்து தப்பி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் அன்பழகன் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனைப்போல, கடந்த 7 ஆம் தேதி சொகுசு காரில் வந்த 5 பேர் கும்பல், தனபால் என்பவரிடம் ரூ.2 ஆயிரம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சேலம் மாநகர காவல் ஆணையர் நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி விசாரணை செய்தபோது, காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் காரில் 2 கத்தியை மறைத்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, காரில் வருகை தந்தை சித்தேஸ்வரன், அரவிந்த் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது, இருவரும் பெரிய அளவிலான பள்ளத்தில் தவறி விழுந்து கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 2 பேரையும் மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இலியாஸ், அஜித், தீபன் ஆகியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.