அரசுப்பள்ளியில் பயின்ற எம்.பி.சி மாணவிக்கு, மருத்துவப்படிப்பு ஒதுக்கீட்டில் குளறுபடி?.. தறித்தொழிலாளி மகள் கண்ணீர் பேட்டி.!

அரசுப்பள்ளியில் பயின்ற எம்.பி.சி மாணவிக்கு, மருத்துவப்படிப்பு ஒதுக்கீட்டில் குளறுபடி?.. தறித்தொழிலாளி மகள் கண்ணீர் பேட்டி.!



Salem Jalakandapuram NEET Passout MBC Girl Student Request to DEO

எம்.பி.சி பிரிவில் உள் ஒதுக்கீடுக்கான மதிப்பெண் பெற்றும், மருத்துவ படிப்பில் அரசின் கல்விக்கட்டணம் மற்றும் கல்லூரிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என சேலம் மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம், கரிக்காப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தறி தொழிலாளி ஆவார். இவரின் மகள் கஸ்தூரி (வயது 19). கஸ்தூரி நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் ஒன்றை அளித்தார். புகாரை வழங்கியதும் கண்ணீருடன் கஸ்தூரி பேசுகையில், 

"ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான் அரசு பள்ளியில் படித்தேன். ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2020 ஆம் வருடம் படிப்பை முடித்துவிட்டு, 2021 ஆம் வருடம் நீட் தேர்வு எழுதினேன். தேர்வின் முடிவில் 252 மதிப்பெண் பெற்று தேர்ச்சி நடந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மருத்துவ தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் என் பெயர் இல்லை. 

என்னை விட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர்கள் கூட உள்ளன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காட்டின் கீழ், எம்.பி.சி பிரிவில் 230 மதிப்பெண் பெற்றால் போடும். ஆனால், 252 மதிப்பெண் பெற்றும் என் பெயர் இல்லை. பொதுப்பட்டியலில் எனது பெயர் உள்ளது. இதனால் அரசின் கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. 

Medical student

மருத்துவம் படிக்க எனது பெயர் பொதுப்பட்டியலில் உள்ளதால் இலட்சக்கணக்கில் செலவாகும். எனது பெற்றோரோ தறி தொழிலாளர்களாக இருந்து வருவதால், அதிக கட்டணம் கொடுத்து படிக்க வாய்ப்பில்லை. ஆதலால், குளறுபடியை சரி செய்து எனது பெயரை அரசு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். நான் மருத்துவம் படிக்க உதவி செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்கையில், "சேலம் மாவட்டத்தில் இதனைப்போல 9 மாணவிகள் புகார் வழங்கியுள்ளனர். புகார் குறித்த விபரம் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.