ராஜராஜசோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய பேச்சால் எழுந்த சர்ச்சை..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு



Ranjith case has been canceled

இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் நீலப் புலிகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி பேசினார். 

கூட்டத்தில் பா.ரஞ்சித் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், " கடந்த 2019 ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.  

நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். 

இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து, எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.