தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுவடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாத துவக்கத்தில் ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழையால் தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த வாரம் நல்ல மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனால் விவசாயிகள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று நவம்பர் 6ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுவதால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
வட தமிழகத்தை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.