புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பிரசவத்திற்கு பின் உயிரிழந்த விவகாரம்; முன்னாள் அமைச்சர் வேதனையுடன் இரங்கல்.!



Pudukkottai Trainee Doctor Dies After Delivery 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் ராசு. இவரின் மனைவி தமிழரசி. தம்பதிகளின் மகள் அஞ்சுதா. இவர் மருத்துவம் பயின்றுவிட்டு, தற்போது புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்” புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம். மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.