குடிபோதையில் ஏட்டையாவின் கட்டை விரலை கடித்து குதறிய லாரி டிரைவர்: சிறப்பான கவனிப்பை வெளிப்படுத்திய போலீசார்..!

குடிபோதையில் ஏட்டையாவின் கட்டை விரலை கடித்து குதறிய லாரி டிரைவர்: சிறப்பான கவனிப்பை வெளிப்படுத்திய போலீசார்..!


police-have-arrested-the-lorry-driver-who-assaulted-the

குடி போதையில் தலைமை காவலரை தாக்கிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ் (35), இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அம்மாபேட்டை-மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டூ-வீலர் ஷோ ரூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சென்ற நாகராஜ் தனது டூ-வீலரின் என்ஜினிற்கு இலவசமாக ஆயில் மாற்றி கொடுக்குமாறு தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து டூ-வீலர் ஷோ-ரூம் மேனேஜர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ஜான் பொன்னையன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் ஷோ-ரூமுக்கு சென்று நாகராஜீக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்த காரணத்தால், டூ-வீலரை பறிமுதல் செய்ததுடன், மறுநாள் காலையில் வந்து காவல் நிலையத்தில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்த நேரத்தில் தலைமை காவலரின் சட்டையை பிடித்த நாகராஜ், அவரிடம் இருந்த பேனாவை திறந்து காவலரின் இடது காதுக்கு மேல் குத்தியுள்ளார். அது மட்டுமன்றி தலைமை காவலரின் இடது கை பெருவிரலை கடித்துக் குதறிய நாகராஜ், உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதன் பின்னர் தலைமை காவலர் முருகன் அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் நாகராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளார். இதன் பின்னர் தலைமை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகராஜ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.