அனைத்து பணியாளர்களுக்கும் அந்த ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு.! தொழிலாளர் நலத்துறை அதிரடி அறிவிப்பு.!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் அனைத்து பணியாளர்களுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1358ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பிடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 06.04.2021 அன்று அவர்கள் வாக்களிக்க எதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டில், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான 06.04.2021 அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்படவேண்டும் எனவும் அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்கவேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.