வீடு வாடகைக்கு எடுத்து கிலோ கணக்கில் கஞ்சா வியாபாரம் செய்த மூதாட்டி.! தட்டி தூக்கிய போலீஸ்.!

வீடு வாடகைக்கு எடுத்து கிலோ கணக்கில் கஞ்சா வியாபாரம் செய்த மூதாட்டி.! தட்டி தூக்கிய போலீஸ்.!



Old women arrested for kanja sale

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்செயலாகவோ, தவறுதலாகவோ போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.

போதைப் பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது.

இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினருக்கு, கூட்டேரிப்பட்டு அருகில் மூதாட்டி ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த மூதாட்டியின் செல்போன் எண்ணை வைத்து அவரது லொக்கேஷனை கண்டறிந்தனர். இதனையடுத்து கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை அடையாளம் கண்டு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிடிப்பட்ட மூதாட்டியிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா(60) என்பது தெரியவந்தது. தற்போது அவர் விழுப்புரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதும், அந்த வாடகை வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பாட்டி விஜயாவை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்ததில், 10 கிலோ அளவில் கஞ்சா இருந்தது அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூதாட்டி விஜயா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.