105 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய பெண் கலெக்டர்; அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
105 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய பெண் கலெக்டர்; அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நெல்லை மாவட்ட காலெக்டராக கடந்த மே மாதம் முதல் பொறுப்பேற்றுவரும் ஷில்பா பிரபாகர் சதீஷ், சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்துள்ளார்.
பின்னர், அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கழிவுநீர் ஓடைகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தெரு விளக்குகளை ஆய்வு செய்த அவர், எரியாத விளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுமாறு உத்தரவிட்டார்.
மேலும் சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அவர் ஏறியது தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் விடுவிடுவென அவர் ஏற ஆரம்பித்துள்ளார். அவருடன் வந்திருந்த அதிகாரிகள் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்ட நிலையில் ஒரு பெண்ணாக இவர் செய்த காரியம் பாராட்டத்தக்கது.
அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.