பணத்தாசையில் அப்பாவிடம் குழந்தை விற்பனைக்கு டீலிங் பேசிய மருத்துவர்; குழந்தை விற்பனை விவகாரத்தில் பகீர் வாக்குமூலம்.!

பணத்தாசையில் அப்பாவிடம் குழந்தை விற்பனைக்கு டீலிங் பேசிய மருத்துவர்; குழந்தை விற்பனை விவகாரத்தில் பகீர் வாக்குமூலம்.!



Namakkal Thiruchengode Baby Selling Issue Doctor Shocking Statement 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர் அனுராதாவின் (வயது 39) தூண்டுதலின் பேரில், தினேஷ் என்பவரிடம் குழந்தையை விற்பனை செய்ததாக லோகாம்பாள் (வயது 38) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவர் அனுராதாவும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று காலை நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மருத்துவர் அனுராதா அளித்த வாக்குமூலத்தில் பல பரபரப்பு தகவல் தெரியவந்தது. அதாவது, "திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராஜாதாவுக்கு அர்ஜுனன் என்ற கணவர், 2 மகள்கள் இருக்கின்றனர். அர்ஜுனன் வியாபாரம் செய்து வந்துள்ளார். 

அனுராதா அங்குள்ள நான்கு கால் மண்டபம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து மருத்துவம் பார்த்துவந்த நிலையில், கிளினிக்கில் வேலை செய்து வந்த லோகாம்பாள் மூலமாக குழந்தைகளை வளர்க்க இயலாத நபர்களிடம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வேன். 

இது எனக்கு நல்ல வருவாயை தந்தது. குழந்தை இருந்தால் சொல்லுங்கள் நல்ல பணம் பார்க்கலாம் என காதில் கேட்ட வார்த்தைகள் மனதுக்குள் பணத்தாசையை ஏற்படுத்த, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தனலட்சுமி என்ற பெண்மணி கருக்கலைப்பு செய்ய என்னிடம் வந்தார். 

அவரிடம் கருக்கலைப்பு செய்தால் உனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என கூறி குழந்தையை வளர்க்கச்செய்து, பிரசவத்திற்கு பின்னர் அதனை விற்பனை செய்திடலாம் எனவும் தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி எனது மருத்துவமனையிலேயே குழந்தை பிறந்தது. 

ஆண் குழந்தையை தாயிடம் கூட காண்பிக்காமல் லோகாம்பாளிடம் கொடுத்தேன். அவர் ரூ.3 இலட்சம் பணத்தை எனக்கு கொடுத்துவிட்டு, ரூ.20 ஆயிரத்தை அவருக்கு கமிஷனாக எடுத்துக்கொண்டார். ரூ.3 இலட்சம் பணம் கையில் கிடைத்ததும் ஆசையால், தினேஷ் என்பவரின் மனைவி நாகதேவிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததை எனக்கு சாதகமாக்கி அவர்களிடம் பணத்தாசை காண்பித்து பேசினேன். இறுதியில் சிக்கிக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.