டாஸ்மாக்கில் கைவைத்த விற்பனையாளர்.. 100 பாட்டிலை திருடிவிட்டு பலே நாடகம்... கம்பி என்னும் சோகம்.!

டாஸ்மாக்கில் கைவைத்த விற்பனையாளர்.. 100 பாட்டிலை திருடிவிட்டு பலே நாடகம்... கம்பி என்னும் சோகம்.!



Namakkal Gobi Near Tasmac Cashier stolen Liquor Bottle and File FIR Finally Accuse Arrested

தான் வேலைபார்க்கும் கடையிலேயே மதுபானம் திருடிய விற்பனையாளர், சி.சி.டி.வி கேமிரா காட்சியால் சிக்கிக்கொண்டார். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அரசூர் இண்டியம்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபானக்கடையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருள்ராஜ், சரவணன், மாரிமுத்து ஆகியோர் விற்பனையாளராக பணியாற்றுகிறார்கள். விண்ணப்பள்ளியில் வசித்து வரும் சந்திரன் மேற்பார்வையாளராக இருக்கிறார். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பணியில் இருந்த சண்முகம், இரவில் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்துபார்த்தபோது மதுபானக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விற்பனையாளர் சண்முகம் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

namakkal

புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட விசாரணையில், மதுபான இருப்புகளை சோதனை செய்தபோது 100 பாட்டில் திருடப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கடையின் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிரா வயர்களும் அறுக்கப்பட்டு இருந்த நிலையில், சம்பவத்திற்கு முன்னதாக பதிவான காட்சிகள் பார்க்கப்பட்டது.

அப்போது, சண்முகம் பணிநேரம் முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் மற்றொரு நபருடன் வந்து கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து, சண்முகத்தை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள், மற்றொருவரை தேடி வருகின்றனர். மதுபாட்டிலை திட்டமிட்டு திருடிவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்த விற்பனையாளர் தொடர்பான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.