3 நாட்களுக்கு முன்பு மாயமான ப்ளஸ்-1 மாணவி சடலமாக மீட்பு: கொலையா?, தற்கொலையா?!.. குழம்பும் போலீஸ்..!

3 நாட்களுக்கு முன்பு மாயமான ப்ளஸ்-1 மாணவி சடலமாக மீட்பு: கொலையா?, தற்கொலையா?!.. குழம்பும் போலீஸ்..!


Missing Plus-1 student recovered after 3 days as dead body

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள கொடுக்கன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் ஒரு விவசாயி. இவருடைய மகள் ராஜேஸ்வரி (16). இவர் மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரது வீடுகளில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் மகள் மாயமானது குறித்து வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே  நேற்று கொடுக்கன்குப்பம் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக மிதப்பதாக தகவல் காட்டுத்தீ போல பரவியது.

இந்த சம்பவம் குறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையம் மற்றும் வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 30 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்பு காவல்துறையினர் ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.