தகப்பன் நீ இல்லை.. தாய்மாமன்கள் லட்சம் பேர் உள்ளோம்! காவலர் சுப்பிரமணியன் மறைவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இரங்கல்!

தகப்பன் நீ இல்லை.. தாய்மாமன்கள் லட்சம் பேர் உள்ளோம்! காவலர் சுப்பிரமணியன் மறைவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இரங்கல்!



minister rajendrabalaji Mourning to died police

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியைச் சேர்ந்த குற்றவாளி துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அப்போது,  குற்றவாளி தப்ப முயன்ற போது,  காவலர்கள் தொடர்ந்து சென்றனர். அவரைக் கைது செய்ய முயன்றபோது, காட்டு பகுதியில் இருந்த குற்றவாளி, தன்னைப் பிடிக்க வந்த  காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளான். 

அந்த நாட்டு வெடிகுண்டு வீச்சில், 28 வயதே ஆன காவலர் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சொந்த ஊரான பண்டாரவிளையில் சுப்ரமணியனின் உடலுக்கு, எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், காவலர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட டிஜிபி திரிபாதி, தென்மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவீன் குமார் அபிநவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர், மயானத்தின் நுழைவு வாயிலில் இருந்து சுப்பிரமணியனின் உடலை சுமந்து வந்தனர். சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், சுப்பிரமணியன் மறைவு குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டு, புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், மிடுக்கானது தமிழ்நாடு காவல்துறை! துடிப்பானவர் காவலர் சுப்பிரமணியன்! வன்முறைக்கு அவர் பலியானார் என்ற செய்தி மனிதநேயத்தை உலுக்குவதாக இருக்கிறது.  உன் பிள்ளைக்குத் தகப்பன் இல்லை; ஆனால், தாய்மாமன்கள் லட்சம் பேர் உள்ளோம். உன் வீரத்திற்கு, தமிழகத்தின் தலைமகன் எடப்பாடியார் தலை வணங்குகிறார். கடமைவீரர் காவலர் சுப்பிரமணியனுக்கு வீரவணக்கம்! உனக்கு எனது புகழஞ்சலி! என பதிவிட்டுள்ளார்.